புதன், 22 ஜூன், 2016

குறள் நெறிக்க கதைகள்.- நல்லதே பேசு.

தொடர்ச்சி ;
அவன் அழுவதைக் கண்டு இன்ஸ்பெக்டர் மனம் இளக வில்லை. 
"அந்தப் பையனுக்கு ஏதேனும் ஆச்சுன்னா இவனை சிறையில்தான் தள்ளவேண்டியிருக்கும். தெரியுமா?இவன்தான் பெரிய கல்லை வைத்துக் கொண்டு இந்தக் கல்லாலேயே நீ அடிபட்டுச் சாகப் போறேன்னு சொல்லியிருக்கான்."
"சொன்னேம்பா ஆனா அடிக்கல்லேப்பா. வீட்டுக்கு அண்ணன் பின்னாலேயே வந்திட்டேம்பா."
அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காத இன்ஸ்பெக்டர் அவனை அங்கேயே உட்கார்த்திவிட்டார்.அவன் அருகே நின்ற கேசு "சொன்னேனே கேட்டியா. வாயிலே தகாத வார்த்தையைச் சொல்லாதேன்னு எத்தனை தடவை சொன்னேன்."என்றவன் தம்பிக்காகப் பரிதாபப் பட்டான்.
பயத்தில் அழுது அழுது மாதுவின் முகமே வீங்கிவிட்டது."இவனைப் பற்றி நன்றாக விசாரித்துவிட்டோம்.மிகவும் கோபக்காரன் சண்டைக்காரன் மட்டுமில்லாமல் கண்டபடி பேசுவானாமே.கோபத்தில் கல்லை அந்தப் பையன்மேல் எரிஞ்சிருக்கலாமில்லையா/"
எதுவும் பேச வாயின்றி நல்லசாமி மகனுக்குத் துணையாக அங்கேயே அமர்ந்து விட்டார்.
அப்போது அங்கே ஒரு பெரியவர் வந்தார். இன்ஸ்பெக்டரைப் பார்த்து "ஐயா கும்பிடுறேனுங்க"என்றவரை யார் நீ என்பதுபோல் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
"ஐயா நான் மாந்தோப்புக்கு காவல்காரனுங்க.ஒரு பையன் நம்ம தோட்டத்துல மரத்துமேல இருந்து கீழ விழுந்திட்டானுங்க அதைச் சொல்லத்தானுங்க வந்தேன்" 
"நம்ம பையன் அதைப் பார்த்திட்டு என்கிட்ட சொன்னானுங்க நான் வரதுக்குள்ள அவனை  ஆசுபத்திரிக்கி தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு தெரிஞ்சுதுங்க."
"அப்போ இந்தப் பையன் கல்லால் அவனை எறியல்லியா?"
"இல்லீங்கய்யா அந்தப் பையன் எம்மவன் வாரதைப் பார்த்து பயத்துல கீழ விழுந்திட்டாங்கய்யா.கீழ இருந்த கல்லுல அவன் தலை பட்டு மயங்கிட்டாங்கய்யா."
"ஏண்டா, கல்லாலேயே அடிபட்டு சாகப் போறேன்னு சொன்னியாமே.ஏன் சொன்னே?"
அழுதுகொண்டே இருந்த மாதுவை அணைத்துக் கொண்ட கேசு "அவன் அப்படித்தான் வாயில வந்ததைப் பேசுவான் சார் நாவை அடக்கி நல்லதே பேசுன்னு எத்தனையோ தடவை சொல்லியும் இவன் திருந்தல. அதான் இத்தனை கஷ்டத்துக்கு காரணம். செய்யாத தப்புக்கு வாயால தகாத வார்த்தை சொன்னதால இப்படி மாட்டிக்கிட்டான்."என்றான் அவசரமாக.
"நல்ல வேளை . அந்தப் பையன் பார்த்ததால் நீ குற்றவாளியில்லைன்னு  தெரிஞ்சு போச்சு.
இனிமேலாவது நாவை அடக்கி நல்லதைப் பேசக்  கத்துக்க.இல்லாட்டி இப்படித்தான் ஏடாகூடமா மாட்டிக் கொள்வாய்.நீங்க பையனைக் கூட்டிப் போங்க சார்."என்றபோது பெரிய பெருமூச்சு விட்ட மாது  தன் அண்ணனைக் கட்டிக்க கொண்டான் தம்பி.
" இனிமே உன்னைப் போலவே நானும் நல்ல படியா நடந்து நல்ல பேர் எடுப்பேன் அண்ணே "
அவன் தோள்மீது கை போட்ட கேசவன், "நம்ப தமிழ்ப்பாடத்தில்   வந்திருக்கற முதல் குறளே  
 நாவைக் கட்டுப்படுத்தாட்டா சொல்குற்றத்தில அகப்பட்டுத் துன்பப்படுவாய்   அப்படீங்கறதுதானே. எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்கணும்னு சொல்லியிருக்கே."
      "  யாகாவா  ராயினும்  நாகாக்க  காவாக்கால் 
         சோகாப்பர்  சொல்லிழுக்குப்  பட்டு "  என்று குறளைச் சொல்லி முடித்தபோது நல்லசாமி அவனை அணைத்துக் கொண்டார். அதைப் பெருமையோடு பார்த்துச் சிரித்தான் கேசவன்.
                                            (நிறைவடைந்தது.)
















--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

3 கருத்துகள்:

  1. கதை நல்லபடியாக முடிவடைந்தது படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. திருக்குறள் படித்தால் மட்டும் போதாது. அது சொல்லித்தரும் வாழ்க்கையையும் படிக்க வேண்டும். சிறுவர்களுக்கு இதுபோன்ற கதைகளைப் படித்துக் காட்டித் திருத்த வேண்டும்.
    நல்ல கதை, ருக்மணி. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. இரண்டு பகுதிகளையும் படித்து முடித்தேன். நல்ல வேளை... சிறுவன் திருந்தினானே......

    நல்ல கதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. இரண்டு பகுதிகளையும் இன்றுதான் ஒரேயடியாகப் படிக்க முடிந்தது.

    "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு "

    குறளுக்கு ஏற்றபடி நல்லதொரு நீதிக்கதை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு