சனி, 7 ஜூலை, 2012

91. நீதிபதியின் திறமை.

 

                  ஒரு ஊரில் ஒரு வட்டிக் கடைக்காரர் இருந்தார்.அவரது பெயர் காஞ்சனன். அந்த ஊரிலேயே பெரும் பணக்காரராக இருந்தார். ஊரிலுள்ளோர் யாவரும் அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கிச் செல்வர்.அவர்களிடம் காஞ்சனன் பெரும் பொருளை வட்டியாகப் பெற்று வ்ந்தார்.
                   ஒருமுறை அந்த ஊரில்  மழையே பெய்யவில்லை.அதனால் ஏழை விவசாயிகள் சிலர் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் தங்களின் கஷ்டம் தீர காஞ்சனனை அணுகினர்.வழக்கம் போல அவரும்  பெரும் தொகையை வட்டியாகப் பெற்றுக்  கொண்டு கடன் கொடுத்தார்.. அந்தக் கடனை ஓராண்டுக்குள் அடைத்து விடுவதாகவும் அப்படிச் செய்யாவிடில் காஞ்சனனின் விருப்பத்துக்குத் தக்கபடி தண்டனை அனுபவிப்பதாகவும் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தனர். எப்படியும் ஓராண்டுக்குள் விளைச்சல் மூலம் அவரது  கடனை அடைத்து விட முடியும் என்றே அனைவரும் நம்பினர்.  அவர்களுள் காமேஷ் என்ற வாலிபனும் இருந்தான்.
                   இந்த காமேஷ் என்ற வாலிபன் பெயருக்கேற்றபடி அனைவரிடமும் அன்பும் இரக்கமும் காட்டி அனைவரின் மனத்திலும் நல்ல மதிப்பைப் பெற்றிருந்தான். காஞ்சனனுக்கு காமேஷ் மீது மிகவும் பொறாமை. பெரும் செல்வந்தனான தன் மீது கூட இத்தனை அன்பைச் செலுத்தாத மக்கள் இவன் மீது மட்டும் இத்தனை அன்பைப் பொழிவானேன். மேலும் தன்னிடம் இவன் மட்டும் கடன் வாங்காமல் காலம் கழிக்கிறானே என்றும் அவன் மீது பொறாமை கொண்டிருந்தான். அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
                    பல விவசாயிகளுடன் சேர்ந்து வந்து காமேஷும் கடன் கேட்கவே நல்ல சந்தர்ப்பம் என்று அனைவருக்கும் கடன் கொடுத்து உதவுவதுபோல் காமேஷுக்கும் கொடுத்தான். ஆனால் மறக்காமல் தன் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டான் காஞ்சனன்.எல்லோரையும் போலவே காமேஷும் எப்படியும் ஓராண்டுக்குள் பணத்தைக் கட்டிவிடலாம் என எண்ணி காஞ்சனனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான்.
ஆனால் அந்த ஆண்டும் பயிர் செய்ய முடியாமல் வானம் பொய்த்து விட்டது. அத்தனை விவசாயிகளும் பெரும் துன்பத்துடன் காஞ்சனனை அணுகினர். அவர்களின் நிலை கண்டு காஞ்சனன் மிகவும் மகிழ்ந்தான். எப்படியாவது காமேஷை தண்டித்து அவனைக் கொன்று விடவேண்டும் அல்லது ஊரைவிட்டு விரட்டிவிட வேண்டும் என்பதே காஞ்சனனின் எண்ணமாக இருந்தது.
ஊர் மக்கள் அனைவரும் காஞ்சனனை சந்தித்தனர்.வானம் பொய்த்ததை எடுத்துச் சொல்லி இன்னும் ஓராண்டு கழித்துப் பணம் தருவதாகச் சொன்னபோது காஞ்சனன் சம்மதிக்கவில்லை.அவர்கள் சொன்ன கெடுவுக்குள் பணம் தராவிடில் அவரவருக்குச் சொந்தமான நிலங்களை என்னிடம் ஒப்படைக்கவேண்டும் இல்லையேல் காமேஷின் மார்பிலிருந்து ஒரு கிலோ சதையை  வெட்டித் தரவேண்டும் என்று வழக்குத் தொடுத்தார். வழக்கு நீதிபதியின் முன் சென்றது.
வழக்கைக் கேட்டமக்கள் அனைவரும் தங்கள் நிலத்தைக் கொடுத்து காமேஷின் உயிரைக் காக்க முன் வந்தனர். ஆனால் காமேஷ் அவ்வாறு செய்வதைவிட தான் ஒருவன் அனைவரின் வழ்வுக்காக உயிர் விடுவது சிறந்தது என்று முடிவு செய்தான்.நீதிபதியிடம் அனைவரின் கடனுக்காகத் தன் உடலிலிருந்து ஒரு கிலோ சதையை வெட்டித் தரச் சம்மதித்தான். அவனது நல்ல உள்ளத்தையும் காஞ்சனனின் பொறாமை உள்ளத்தையும் நீதிபதி புரிந்து கொண்டார்.
அவர் மிகவும் யோசித்தார். காமேஷின் உயிரைக் காப்பதோடு காஞ்சனனுக்கும் தண்டனை தர விரும்பினார். பேராசையும் பிறரைத் துன்புறுத்திவாழும் எண்ணமும் கொண்ட காஞ்சனனுக்குப் புத்தி புகட்ட விரும்பினார்.
வழக்கை நன்கு விசாரித்துத் தீர்ப்புக் கூறினார்."காஞ்சனரே, இத்தனை மக்களின் நிலத்தையும் உமது கடனுக்கு ஈடாக நீர் கேட்பது நியாயமே. ஆனால் அதற்குப் பதிலாக காமேஷின் இதயத்திலிருந்து ஒரு கிலோ சதையைக் கேட்பது என்பது சரியல்ல. தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்."
"இல்லையில்லை. எனக்கு காமேஷின் இதயத் தசை ஒருகிலோ கொடுத்துவிட்டால் அத்தனை பேரின் கடனையும் நான் தள்ளுபடி செய்து விடுகிறேன்"
"உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? வார்த்தை மாறமாட்டீர்களே?"
"கண்டிப்பாக மாறமாட்டேன்.ஒரு கிலோ சதையை நானே அறுத்து  எடுத்துக் கொள்கிறேன்."
"சரி. இத்தனை பேரும் பட்ட கடனுக்காக காமேஷின் ஒரு கிலோ சதையை காஞ்சனன் அறுத்து எடுத்துக் கொள்ளட்டும்."என்று தீர்ப்பளித்தவுடன் காமேஷிடம் அன்பு கொண்டவர்கள் அழுது புலம்பினர்.ஆனால் காஞ்சனன் மிகவும் மகிழ்ச்சியோடு தராசு கத்தி சகிதமாக அருகே வந்தான்.அவன் முகத்தில்  மகிழ்ச்சியும் பலநாள் எண்ணத்தைத் தீர்த்துக் கொள்ளும் வெறியும் தெரிந்தது. அதை அருகே இருந்த நீதிபதியும் கவனித்தார்.
ஆவலோடு காமேஷின் அருகே கத்தியோடு நெருங்கிய காஞ்சனனைப் பார்த்து,"நீ ஒரு கிலோ சதைதானே கேட்டாய். அதற்குமேல் ஒரு கிராம் கூடவோ குறைவாகவோ நீ வெட்டக் கூடாது.. அதுமட்டுமல்ல. ஒரு துளி ரத்தம் கூட சிந்தக் கூடாது.இதை நினைவில் கொள். உன் விருப்பப்படி சரியாக ஒரு கிலோ சதையை ரத்தம் சிந்தாமல் வெட்டி எடுத்துக் கொள். என்றார். காஞ்சனன் திகைத்தார். மக்கள் கோஷம் போட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அளவாக ஒருகிலோ வெட்டுவது அதுவும் ரத்தம் சிந்தாமல் முடியுமா. ஏமாற்றத்துடன் கத்தியைக் கீழே போட்டுவிட்டு
ஏமாற்றத்துடன் நின்றார.
"காஞ்சனன் செய்த சூழ்ச்சிக்காகவும், அவன் காமேஷைக் கொல்ல எண்ணியதற்காகவும் அவனுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன்."என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.நீதிபதியின் திறமையை அனைவரும் பாராட்டினர்.
ஒருவனைக் கெடுக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுமானால் அது நம்மையே அழிக்கும் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com