வெள்ளி, 11 நவம்பர், 2011

76 -பாட்டி சொன்ன கதை.பகுதி -- 1

பாட்டி சொன்ன கதை. பகுதி -- 1
இந்த முறை சற்று வித்யாசமாக இருக்கட்டும் என்று எனக்கு என் பாட்டி சொன்ன கதையை உங்களுக்குச் சொல்கிறேன் இது ரசிப்பதற்கு மட்டும் என்று நினைக்காமல் இதிலும் ஏதேனும் நல்ல விஷயம் இருக்கும் என்று தோன்றினால் அதைப் புரிந்து  கொள்ளவும்.
          இரத்தினபுரி என்ற நாட்டை ரத்தினவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு ரத்னாங்கி என்ற பெயருள்ள மகள் ஒருத்தி இருந்தாள்.அவள் பிறந்த நாள் முதல் அழுது கொண்டே இருந்தாள். அவள் பெரியவளான பின்பும் அழுகையை நிறுத்தவில்லை.
அவள் அழும் காரணத்தை மன்னன் எவ்வளவு கேட்டும் கூறாமல் அழுதுகொண்டே இருந்தாள். யாராலும் அவள் அழுகையை நிறுத்தவே இயலவில்லை.அதனால் அவளைத் தனியே ஒரு அரண்மனையில் விட்டு சில சேடிப் பெண்களையும் துணைக்கு வைத்து விட்டான் மன்னன் ரத்தினவர்மன்.தனக்குப் பின் நாடாள வேண்டிய  தன் மகள் இவ்வாறு எப்போதும் அழுது கொண்டிருக்கிறாளே என்று மன்னன் மிகவும் கவலைப் பட்டான்.தன் மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தான்.
            அவனது மந்திரிகளுள் ஒருவர் ஒரு ஆலோசனை சொன்னார்.அதன்படி தன் மகளின் அழுகையை யார் நிறுத்துகிறார்களோ அவருக்கே அவளை திருமணம் முடித்து தன் நாட்டையும் தருவதாக பறை அறைவித்தான்.
இச்செய்தி அக்கம்பக்கத்து நாடுகளுக்கும் எட்டவே பல நாட்டு அரசகுமாரர்களும் ரத்னாங்கியின் அழுகையை நிறுத்த எண்ணம் கொண்டு இரத்தினபுரிக்கு வந்தனர்.ஆனால் எவ்வளவு முயற்சித்தும் ரத்னாங்கியின் அழுகையை யாராலும் நிறுத்த இயலவில்லை.
           ரத்தினபுரிக்குப் பக்கத்து நாடான சத்தியபுரியின் மன்னன் சத்தியசீலன். அவனுக்கு இரண்டு பிள்ளைகள்.மூத்தமகன் சஞ்சயன்.இரண்டாவது மகன் துர்ஜயன்.இவர்கள் இருவரும் இரத்தினபுரியின் இளவரசியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளது அழுகையைத் தாங்கள் நிறுத்துவதாகக் கூறிவிட்டு சத்தியசீலனிடம் ஆசிபெற்றுப் புறப்பட்டனர்.
இருவரும் காட்டுவழியேகுதிரையில்பயணம் செய்து  களைத்துப் போய் ஒரு மரத்தடியில் இளைப்பாற அமர்ந்தனர்.அப்போது அருகே யாரோ முனகும் சத்தம் கேட்கவே சஞ்சயன் திரும்பிப் பார்த்தான். ஒரு வயதான அம்மா அங்கே படுத்திருந்தாள். அவளிடம் சென்று விசாரிக்க சஞ்சயன் எழுந்தபோது துர்ஜயன் அவனைத் தடுத்தான்.ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் சஞ்சயன் அந்த அம்மாளிடம் என்னவாயிற்று என்று கேட்டான்.
"அப்பா, நான் என் குடிசைக்குப் போகவேண்டும். நடக்கமுடியவில்லை.தண்ணீர் தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து தருகிறாயா?"
அப்போது அங்கே வந்த துர்ஜயன்,"வேறு வேலையில்லை? சஞ்சயா, நமக்கு நேரமாகிறது போகலாம் வா," என்று அவனை அழைத்தான்.அவனைத் தடுத்து நிறுத்திய சஞ்சயன் தன்னிடம்  இருந்த குடுவையிலிருந்து கொஞ்சம் நீரை அந்த அம்மைக்குக் கொடுத்தான். தாகம் தீர்ந்த அந்த அம்மாவும் அவனை வாழ்த்தினாள்.அத்துடன் தன் இடுப்பில்  இருந்த ஒரு வாளை எடுத்துக் கொடுத்தாள். "இந்த வாள் உன் கையில் இருக்கும் வரை நீ எல்லோரையும் ஜெயித்துக் கொண்டே இருப்பாய்."என்று ஆசி கூறி அனுப்பினாள்.
அவளை வணங்கி அந்த வாளைப் பெற்றுக் கொண்ட சஞ்சயன் தம்பியுடன்  இரத்தினபுரி நோக்கிப் புறப்பட்டான்.

              வெகு தொலைவு வந்தும் காட்டைவிட்டு வெளியே வர வழி தெரியவில்லை. வழி தவறி விட்டோம் என சஞ்சயன் அறிந்து கொண்டான்.தம்பியிடம் இது பற்றி சொன்னபோது அவன் இங்கேயே படுத்துக் கொள்வோம் என்று படுத்து விட்டான்.நிலவு வெளிச்சத்தில் சஞ்சயன் தண்ணீர் தேடிப் புறப்பட்டான்.அருகே ஒரு சுனை தெரிந்தது. அதை நெருங்கிய போது அருகே ஒரு முதியவர் முள் செடி மீது படுத்திருந்தார்.
அவர்" தம்பி தயவு செய்து என்னைத் தூக்கி அந்தப் பக்கமாகப் படுக்கவை. உனக்குப் புண்ணியமாய்ப் போகும்" என்றபோது சஞ்சயன் ஐயோ பாவம் என்றபடி அவரைத்தூக்க அவர் திடீரென்று மறைந்தார். அங்கே ஒரு கந்தர்வன் தோன்றினார்.
"சஞ்சயா, சாபத்தால் பல ஆண்டுகளாக இந்தக் காட்டில் தவித்தபடி கிடந்தேன்.ஒரு பௌர்ணமி நாளில் நல்ல மனம் படைத்த அரசகுமாரன் உன்னைதொட்டால்  நீ உன் சாபம் நீங்கப் பெறுவாய் என்று முனிவர் கூறினார். இன்று பௌர்ணமி. யாரேனும் வரமாட்டார்களா எனக் காத்துக் கிடந்தேன்.நீ வந்தாய். உன்னால் என் சாபம் நீங்கப் பெற்றேன்.
இதோ இந்தக் கண்ணாடியைப் பெற்றுக்கொள். நீ பார்க்கவிரும்பும் செய்தியை இது உனக்குக் காட்டும்."என்று கூறி ஒரு சிறு கண்ணாடியைக் கொடுத்தார்.
நன்றி சொல்லிய சஞ்சயன் வணங்கி அதைப் பெற்றுக் கொண்டான். கந்தர்வன் மறைந்தபின் சஞ்சயன் நீரை குடுவையில் நிரப்பிக் கொண்டு தம்பி இருக்கும் இடத்துக்கு வந்து படுத்துக் கொண்டான்.
மறுநாள் சூரியன் உதிக்கும் முன் இருவரும் எழுந்து புறப்பட்டனர்.நேரம்  ஆக ஆக இருவருக்கும் நல்ல பசி எடுத்தது. எங்காவது மனிதரோ வீடோ தென்படாதா எனத் தேடினர்.வெகு தொலைவில் ஏதோ புகை மூட்டம் தெரியவே அந்த இடத்தை நோக்கி இருவரும் வேகமாகத் தங்கள் குதிரையைச் செலுத்தினர்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com