ஞாயிறு, 14 நவம்பர், 2010

51st story. தீபாவளி பிறந்த கதை

                       தீபாவளி பிறந்த கதை.
நரகன் என்னும் அசுரன் பூவுலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான். மண்ணுலகும் வானுலகும் அவனிடம் துன்பப் பட்டுக் 

கொண்டிருந்தது. இது போதாது என்று அவன் சாகாவரம் பெற எண்ணினான். எனவே நரகன் சிருஷ்டி கடவுளான பிரும்மாவைக் குறித்துத் தவம் 

மேற்கொள்ள முடிவு செய்தான்.. 

அவனது தாயான பூமிதேவியும் "மகனே! நீ சாகாவரம் பெற்று விட்டால் என் மனம் மிகவும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெறும். உன் எண்ணப்படியே 

பிரும்மதேவரிடம் சாகாவரம் பெற்று வருவாயாக" என்று ஆசி கூறி அனுப்பினாள். தாயின் அனுமதி பெற்று நரகன் பிரும்மாவைக் குறித்துத் தவம் 

மேற்கொண்டான். காலம் கடந்தது. நரகன் கடுமையான தவத்தை மேற்கொண்டிருந்தான். அவனது தவத்திற்கு மெச்சிய பிரும்மாவும் அவன் முன் 

தோன்றினார்.

"நரகா! உனது கடுந்தவம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். எதற்காக இந்தத் தவம்? என்ன வரம் வேண்டும் உனக்கு?"

கனிவுடன் கேட்டார் பிரும்மா.

"சுவாமி! எனக்கு தாங்கள் சாகாவரம் அளிக்க வேண்டும். புவனங்கள் அனைத்தையும் நான் ஒருவனே ஆளவேண்டும். எனக்கு அழிவென்பதே 

இருக்கக் கூடாது. இந்த வரத்தைத் தாங்கள் அளிக்கவேண்டும்."

"நரகா! உலகங்கள் யாவையும் நீ அடிமைப் படுத்தி வாழ்வாய் என்ற வரம் தருகிறேன். ஆனால் சாகாவரம் தருவது என்பது இயலாதது. ஆனால் 

நீ எப்படி சாகவிரும்புகிறாயோ அப்படியே சாக வரம் தருகிறேன். கேள்."

நரகன் அருகே நின்ற தன் தாயின் முகத்தைப் பார்த்தான். சற்றே சிந்தித்தவன் புன்னகை செய்து கொண்டான்.

"அம்மா!, தங்களின் அன்புக்குரிய மகன் நான். தங்களின் கையினாலேதான் நான் மரணமடைய வேண்டும் எனக் கேட்கிறேன். தாங்கள் எப்படி அம்மா 

என்னைக் கொல்வீர்கள்? அதனால்   எனக்கு யாராலும் ஏன் தேவராலும் மூவராலும் கூட  மரணம் நேராது .எப்படி அம்மா என் வரம்?"

பூமிதேவி மனமகிழ்வுடன் புன்னகைத்தாள்.

"மிகவும் சரி மகனே. அப்படியே வரத்தைப் பெற்றுக்கொள்."

நரகாசுரன் பிரும்மாவைப் பணிந்தான். 

"தேவாதி தேவா! என் தாயின் கையினாலேதான் நான் மரணமடைய வேண்டும். வேறு யாராலும் எனக்கு சாவு வரக் கூடாது."

புன்னகை புரிந்த பிரம்மா "அப்படியே தந்தேன்" என வரம் தந்து மறைந்தார்.

நரகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தாயை வணங்கினான்.

காலம் உருண்டது. நரகனின் அட்டஹாசம் அளவிடற்கரியதாக இருந்தது. தேவரும் மூவரும் நாராயணனிடம் முறையிட்டனர்.


நாராயணன் கிருஷ்ணனாக அவதரித்து மாமனான கம்சனை சம்ஹாரம் செய்தான்.ருக்மணி சத்யபாமாவை மணந்து துவாரகையில் மன்னனாக 

ஆட்சி செய்து வந்தான். அப்போது மக்கள் நரகனிடம் படும் துன்பத்தைப் பற்றி அவனிடம் முறையிட நரகனுடன் போர் தொடுக்கப் புறப்பட்டான் 

கண்ணன். போர்க்கோலம் பூண்ட கிருஷ்ணன் தன் மனைவி சத்யபாமாவை தன் தேரினை ஒட்டிவரக் கூறினார். தேரோட்டுவதிலும் போர்க்களப் 

பயிற்சியிலும் தேர்ந்தவளான சத்யபாமாவும் மிக்க மகிழ்ச்சியுடன் புறப்பட்டாள்.  

நரகாசுரனுக்கும் கிருஷ்ணனுக்கும் கடும் போர் நடந்தது. தேவர்கள் அச்சத்துடன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நரகனின் வரம் பற்றி 

அறிந்தவர்களாதலால் என்ன நடக்குமோ என்று கவலையுடன் கவனித்தனர். நரகன் விடுத்த ஆயுதத்தால் கிருஷ்ணன் மயங்கி வீழ்ந்தான். 

இதைக் கண்ட சத்யபாமா தேரில் நின்றவண்ணம் கிருஷ்ணனின் கையில் இருந்த வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டாள். அப்போது 

அவளைக் கவனித்த நரகன் திகைத்து நின்றான். சற்றும் தாமதியாது கோபத்துடன் பாமா விடுத்த அம்பு நரகனின் மார்பைத் துளைத்தது. 

நரகன் கீழே  விழுந்தான். அதே சமயம் மயங்கியவர் போல் விழுந்திருந்த கிருஷ்ணன் எழுந்து பாமாவின் அருகே வந்தான். தேவர்கள் மலர்மாரி 

பொழிந்தனர். உயிர் பிரியும் நிலையில் நரகன் பாமாவைப் பார்த்து " அம்மா" என அழைத்தான். அந்தக் குரல் கேட்ட பாமாவிற்கு தன் முற்பிறவி 

நினைவிற்கு வந்தது. பூமாதேவியின் வடிவமும் கொண்டாள். தன் மகனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு அழுதாள். 

"மகனே! நானே உன் இறப்புக்குக் காரணமாகிவிட்டேனே. நீ கேட்ட வரம் பலித்துவிட்டதே மகனே! இந்த அம்மாவை மன்னித்து விடடா மகனே."

"அம்மா! கலங்காதீர்கள். தங்கள் கையினால் நான் மடிவதில் எனக்கு மகிழ்ச்சியே."

கிருஷ்ணன் நாராயணனாக வடிவம் தாங்கி அருகே வந்து நின்றார்

." நரகா! உன் வரத்தின் படியே நீ முடியவேண்டும் என்பதற்காகவே சத்தியபாமாவை உடன் அழைத்து வந்தேன். அவள் கையினாலேயே 

நீமடியவேண்டும் என்ற உன் விருப்பம் நிறைவேறியதல்லவா" 

"தந்தையே, உலகில் தோன்றிய எந்த உயிரும் மறைந்தே தீரும் என்ற உண்மை என்னால் நிரூபிக்கப் பட்டுவிட்டது."

 "உண்மை. நரகா, உனக்கு என்ன வேண்டும் கேள். "

 "எனக்கு தாங்கள் ஒரு வரம் தரவேண்டும்" 

"மீண்டும் எழவேண்டும் என்பதைத்தவிர  வேறு என்ன வேண்டுமானாலும் கேள்."  மிகவும் கவனமாகப் பேசினான் நாராயணன்.

"இல்லை தந்தையே. நான் மறைந்த இந்த நாளை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டும். இருளிலிருந்து ஒளிக்குத் திரும்பும் மக்கள் மனங்களில் 

மகிழ்ச்சியைப் போலவே ஊரெங்கும் ஒளிபெற்றுத் திகழ வேண்டும். இந்த வரத்தைத் தாங்கள் அருளவேண்டும்."

நாராயணன்  மகிழ்ச்சியுடன் "ததாஸ்து"  என அருள் செய்தான்.

போர்க்களம் விட்டு அரண்மனை திரும்பிய கிருஷ்ணனும் நரகனின் மறைவைக் கொண்டாடும் படிப் பணித்தான். உலக மக்களும் வானுலக 

தேவர்களும் நரகாசுரனின் இறப்பைப் பெரும் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நாமும் இந்தநாளை ஒளித் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கிறோமல்லவா. தீபஒளித் திருநாள் என்ற பெயரில் நாம் கொண்டாடும் பண்டிகையே 

தீபாவளித் திருநாள் எனப் படுகிறது.

"அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்."
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com