செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

43rd story. sitrerumbum uyir kaakkum.

                                       சிற்றெறும்பும் உயிர் காக்கும்.
ஒரு கோவில் மாடத்தில் புறா ஒன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. தினமும் அந்தப் புறா இரை தேட அருகே இருக்கும் காட்டுப் பக்கம் போகும். அந்தக் காட்டில் ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது.அதன் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்தப் பழ மரத்தைத் தேடி புறா செல்வது வழக்கம். இப்படி புறா தினமும் பறந்து செல்வதை ஒரு கழுகு கவனித்து வந்தது. அதன் நாவில் எச்சில் ஊறியது. இந்தக் கொழுத்த புறாவைச் சாப்பிட்டால் எத்தனை ருசியாக இருக்கும் என்று நினைத்தது அந்தக் கழுகு. ஒருநாள் புறா அந்தக் காட்டை நோக்கிச் செல்லும் போது கழுகு பார்த்து விட்டது. புறாவைக் கழுகு துரத்த ஆரம்பித்தது. உணவுக்காகத் துரத்தும் கழுகை விட உயிருக்காகப் பறக்கும் புறாவின் வேகம் அதிகமாயிருப்பதில் ஆச்சரியம் இல்லையல்லவா?
எனவே புறா கழுகிடமிருந்து தப்பி கோவில் மாடத்தில் புகுந்து ஒளிந்து கொண்டது. ஏமாந்து போன கழுகு இன்னொரு சமயத்திற்காகக் காத்திருந்தது.
பொழுதும் விடிந்தது.வழக்கம்போல புறா இரை தேட காட்டிற்குச் சென்றது. வழக்கமான ஆலமரத்திற்குச் சென்று கிளையில் அமர்ந்திருந்தது.
அப்போது தற்செயலாகக் கீழே பார்த்தது. ஒரு சிற்றெறும்பு  நதியில் விழுந்து தண்ணீரில் மூழ்கியபடியே தத்தளித்துக் கொண்டிருப்பதைப்  பார்த்தது.
புறாவிற்கு அந்த எறும்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே மரத்தில் இருந்த இலைகளில் பெரிய இலையாகப் பறித்து நீரில் போட்டது. அந்தஎறும்பும்  புறாபோட்ட இலையின் மேல் ஏறிக் கரை சேர்ந்தது. ஓடிச் சென்று புற்றுக்குள் நுழைந்தது. புறாவும் மகிழ்ச்சியாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.
சிலநாட்கள் கழிந்தன.வழக்கம்போல புறா ஆலமரத்திற்குச் சென்றது. அங்குள்ள பழங்களின் கொட்டைகளைச் சாப்பிட்டது. இந்தப் புறாவைக் கவனித்த வேடன் ஒருவன் புறாவைக் கொல்ல வில்லில் அம்பைப் பூட்டினான்.புறா தப்பிப் பறக்க நினைத்தபோது மேலே கழுகு பறப்பதைப் பார்த்துவிட்டது.பறக்காவிட்டால் வேடன் அம்பை விட்டுக் கொன்று விடுவான். பறந்து சென்றால் கழுகு கொன்று விடும். இன்று நமக்குச் சாவு நிச்சயம் என்று புறா எண்ணியது. கடைசி முறையாகக் கடவுளை வேண்டிக் கொண்டது. திடீரென்று "ஆஆ..."என்று வேடன் அலறும் சத்தம் கேட்டது. புறா கண்களைத் திறந்து பார்த்தது. தன்னைக் குறி பார்த்த வேடன்தன் கால்களைப்  பிடித்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் விட்ட அம்பும் குறி தவறி புறாவைப் பிடிக்கப் பறந்து கொண்டிருந்த கழுகின்மேல் பட்டு அதைக் கொன்று விட்டது. சரியான சமயத்தில் வேடனின் காலை எறும்பு  கடித்ததால்தான் அவனது குறி தவறித் தன் உயிரும் காப்பாற்றப் பட்டது. அத்துடன் தன் உயிரைப் பறிக்கக் காத்திருந்த கழுகினால் வந்த  ஆபத்தும் நீங்கியது.
மனதுக்குள் எறும்புக்கு நன்றி சொல்லிக் கொண்டே சந்தோஷமாகப் பறந்து சென்றது அந்தப் புறா. சிறு எறும்புதானே என நினைக்கலாகாது. அதுகூட ஒரு உயிரைக் காக்கமுடியும் என்பதைத தெரிந்து கொள்ள வேண்டும். எனவே யாரையும் எளியர் என்று எண்ணலாகாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் யாரையும் மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
Blog: http://chuttikadhai.blogspot.com