வியாழன், 25 பிப்ரவரி, 2010

ராதையின் பக்தி

அலங்கார ஸ்வரூபனாக கண்ணன் பாமாவின் இல்லத்துள் புகுந்தான். அவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்தாள் பாமா. அவளைக் கண்ட கண்ணன் அவளின் முன்னால் அமர்ந்து அவளது முகவாயைப் பிடித்துக் கொஞ்சினான்.திரும்பிப் பாராமலேயே பேசினாள் பாமா. "இந்த அலங்காரங்களை அவளிடம்தான் செய்து கொள்ள வேண்டுமா?ஏன்?நான் செய்ய மாட்டேனா?"
"இதற்காகவா இத்தனை கோபம்?வேண்டுமானால் இந்த அலங்காரங்களைக் கலைத்து விடுகிறேன். நீ எனக்கு அலங்காரம் பண்ணி விடு."
பாமாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு கெஞ்சினான் கண்ணன்.
ஒரு வழியாக சமாதானமானாள் பாமா. அன்று முழுவதும் கிருஷ்ணன் பாமாவின் இல்லத்திலேயே கழித்தான்.
சிலநாட்கள் கழிந்தன. அன்றும் பாமாவிற்குக் கோபம். என்ன என்று புரியாமலேயே தவிப்பது போல நடித்தான்   கண்ணன்.   
வெகுநேரம் கண்ணன் கெஞ்சவே சற்றே கோபம் தணிந்தாள் பாமா.
"நீங்கள் என்னிடம் இருப்பதை விட அந்த கோபிகையரிடமே அதிக நேரம் தங்கிவிடுகிறீர்களே. அதுதான் எனக்குப் பிடிக்கவேயில்லை."
"இனி அந்த கோபியருடன் சேருவதில்லை. உனக்கு மகிழ்ச்சிதானே பாமா?" பாமா சற்றே புன்னகையை உதிர்த்தாள். சினம் தணிந்த பின் தன் கிருஷ்ணனின் மீது அன்பைப் பொழிந்தாள். கண்ணனும் அவள் அன்பில் திளைத்தான்.
                         இரண்டு நாட்கள் கழிந்தன.அன்றும் பாமா கண்ணனை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தாள்.  கண்ணன் வரவில்லை. ஆனால் கண்ணனைத் தேடி அவன் அன்பிற்குரியவளான ராதை பாமாவின் வீட்டிற்குள் நுழைந்தாள்.அவளைப் பார்த்ததும் அவள் மீது பொறாமையும் கோபமும் கொண்டாள் பாமா. தனக்கே உரிய கண்ணன் மீது அவள் அன்பு செலுத்துவது பாமாவிற்குப் பிடிக்கவில்லை.இருப்பினும் இல்லம் வந்தவளை 
கல்கண்டு கலந்த பால் கொடுத்து உபசரித்தாள்.
                          அதை மகிழ்ச்சியுடன் வாங்கிய ராதை" கிருஷ்ணார்ப்பணம்"  என்று சொல்லிப் பருகினாள். மீண்டும் கண்ணனைத் தேடி வெளியே ஓடிவிட்டாள் ராதை.
                           வழக்கம்போல் மாலைவேளையில் கண்ணன் பாமாவைத் தேடி அவளது இல்லத்திற்கு வந்தான்.வரும்போதே மிகுந்த வேதனையை முகத்தில் தாங்கி வந்தான். நேராக ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டான். ஒருநாளும் இல்லாத் திருநாளாக கண்ணன் இப்படிச் செய்தது பாமாவுக்குப பேரதிர்ச்சியாக இருந்தது.கண்ணனின் அருகே ஓடி வந்தாள்.அவன் முகத்தை வருடினாள்."சுவாமி! என்னவாயிற்று தங்களுக்கு?ஏன் இந்தச் சோர்வு? "
"பாமா! என் கால் மிகவும் வலிக்கிறது. ஏனென்று தெரியவில்லை." என்றபடியே கால்களைக் காட்டினான் அந்த மாயக் கள்ளன்.பாமாவும் அவன் காலடியில் அமர்ந்து கால்களைத் தன் மடிமீது வைத்துக் கொண்டு வருடினாள்.
திடுக்கிட்டாள். கண்ணனின் பாதங்கள் இரண்டிலும் பெரிய பெரிய கொப்புளங்கள் இருந்தன.துடித்து விட்டாள் பாமா. "தங்களுக்கு ஏனிந்த நிலை சுவாமி?"
"பாமா! நான் என்ன செய்வேன்? யாரோ என் பக்தைக்கு சூடான பானம் அருந்தக் கொடுத்துள்ளார். அவள் அதை எனக்கு அர்ப்பணித்துவிட்டுப் பின் பருகினாள். அந்தப் பானத்தில்  இருந்த சூட்டை நான் ஏற்றுக் கொண்டேன். அந்த பக்தை தன்  உள்ளத்தில் எப்போதும் என் பாதங்களை வைத்துப் பூஜிக்கிறாள்.அத்தகைய பக்தையைக் காக்க வேண்டியது இந்தப் பரந்தாமனின் கடமையல்லவா பாமா?"
பாமா வெட்கித் தலை குனிந்தாள். ராதைக்குத் தான் கொடுத்த சூடான பால்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதைத் தெரிந்து கொண்டாள்.அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.
"பரந்தாமா! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்த தவறுதான் உங்களின் இந்த நிலைக்குக் காரணம்.தங்கள் மீது அளவு கடந்த அன்பைப் பொழியும் ராதையின் மீது நான் பொறாமைப் பட்டேன். அதன் காரணமாக மிகவும் சூடான பாலை அவள் பருகக் கொடுத்தேன்.அவள் துன்பப் படுவாள் என நினைத்தேன். நான் செய்த இந்தத் தவறை மன்னித்து விடுங்கள்.உண்மையான பக்தி கொண்ட ராதாவை நான் சோதித்து விட்டேன். என் தவறைப் பொறுத்தருளுங்கள்." கண்ணனின் கால்களைப் பற்றிக் கொண்டு பாமா கதறினாள்.
அவளது கண்ணீர் பட்ட மறுகணமே கொப்புளங்கள் மறைந்தன. அதனுடன் சேர்ந்து பாமாவின் பொறாமையும் மறைந்தது.
__________________________________________________________________________________________________________--

காளிதாசனின் பெருமை.

போஜராஜனின் அவையில் நவரத்தினங்கள் என்று சொல்லத்தக்க ஒன்பது கவிகள் இருந்து அவையை அலங்கரித்தனர்.அவர்களுள் தண்டிகவியும் காளிதாசனும் மிகவும் சிறப்புப் பெற்றவர்கள்.அதிலும் காளிதாசன் மன்னனின் தனி அன்பையும் நட்பையும் பெற்றவன்.முதன்மைக் கவியான தன்னை விட காளிதாசன் எந்த விதத்தில் உயர்ந்தவன் என்று மன்னன் காளிதாசனைக் கொண்டாடுகிறார்? என மனதுக்குள் பொறாமை கொண்டார் தண்டிகவி.
இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஒருநாள் தண்டி வழக்கம்போல் சரயு நதியில் நீராடி நதிக்கரையில் யோகநிலையில் அமர்ந்தார். வெகு நேரம் கடந்து கண்களைத் திறந்தார். காளிதாசன் அப்போதுதான் நதியில் மகிழ்ச்சியோடு நீந்தி நீராடிக் கொண்டு இருந்தான். ஒரு கவியாக இருப்பவன் அத்துடன் பெரும் காளி பக்தனாக இருப்பவன் சூரியன் உதித்து இத்தனை நேரம் கடந்து நீராடுகிரானே! இவன் எப்போது காளியைப் பூஜை செய்வது அவைக்கு எப்போது வருவது.இன்று அவைக்குத் தாமதமாகத்தான் வரப்போகிறான். என எண்ணியவாறே புன்னகையுடன் காளிதாசனை ஏளனமாகப் பார்த்தவாறே சென்றார் தண்டிகவி.

                                   இல்லம் சென்ற கவி ஆடை ஆபரணம் பூண்டு அலங்கரித்துக் கொண்டு உணவு உண்டு அவைக்கு வந்தார். அவைக்கு வணக்கம் 
கூறியவாறே காளிதாசனின் இருக்கையைப் பார்த்தவுடன் திகைத்தார். அங்கே அவருக்கு முன்னாலேயே அவைக்கு வந்து அமர்ந்திருந்தான் காளிதாசன். அத்துடன் பொருள் பொதிந்த புன்னகையை தண்டியின் மேல் வீசியவாறே அமர்ந்தான். தனக்குப் பின்னால் தான் நீராடியவன் எப்படி இவ்வளவு விரைவில் வந்து அமர்ந்துள்ளான் என எண்ணியவாறே தன் ஆசனத்தில் அமர்ந்தார் தண்டிகவி.

                                    அன்று தண்டியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. காளிதாசன் எந்த கடமையும் செய்யாமல் அவைக்கு வந்துள்ளான் அதனால்தான் இவ்வளவு விரைவில் அவனால் வரமுடிந்துள்ளது.ஆனால் மன்னனோ இவனைத் தன் உயிர் நண்பனாகவும் சிறந்த 
காளிபக்தனாகவும் எண்ணி பெருமைப் படுததுகிறாரே? எப்படியும் இவனது பெருமையைக் குலைத்து விடவேண்டும்.மீண்டும் சிறந்த காளிபக்தன் என்ற பெயர் எனக்கே வரும்படி செய்ய வேண்டும் என முடிவு செய்து கொண்டார்.

                                   வழக்கம்போல் தண்டிகவி நதியில் ஸ்நானம் செய்து கரையில் கண்களை மூடிமனதுக்குள்  இறைவியைப் பூஜித்தார். அன்றும் அவர் கண்களைத் திறந்தபோது புன்னகையுடன் காளிதாசன் தன்னைக் கடந்து செல்வதைக் கண்டார். இதே நிகழ்ச்சி தொடர்ந்து பல நாட்கள் நீடித்தது.சூரிய உதயத்திற்கு முன்பே தண்டிகவி நீராடி கரையில் அமர்ந்து தேவியைப் பூஜிப்பதும் வெகு நேரம் கழித்து காளிதாசன் வருவதுமாக நாட்கள் நகர்ந்தன.

                                அன்று தண்டி ஸ்நானம் முடித்து ஜபதபங்களை முடித்து நிஷ்டையில் அமர்ந்து காளியைப் பூஜிக்கத் தொடங்கினார்.ஆனால் அவரது கவனம் நீராடும் காளிதாசன் மேல் சென்றது. அதனால் மனதில் காளிக்கு அலங்காரம் செய்யும் போது கழுத்தில் மாலையிடாமலேயே அவள் தலையில் கிரீடத்தைச் சூட்டிவிட்டார். சட்டென கவனத்தைத் திருப்பியவர் தன் பிழையை அறிந்தார்.இப்போது என்ன செய்வது? இப்படியே மாலையிட்டால் கிரீடம் விழுந்துவிடும் கிரீடத்தை எடுத்துவிட்டு மாலையிட்டால் அலங்காரத்தைக் கலைத்த தோஷமாகுமே என்ன செய்வது 
எனத் திகைத்தவாரே "தாயே! இது என்ன சோதனையம்மா எனக்கு?"     என்று மனதுக்குள் கலங்கியவாறே அமர்ந்து விட்டார் தண்டி.

                              நிதானமாக ஸ்நானத்தை முடித்துக் கொண்டு கரையேறினான் காளிதாசன்.கலக்கத்தோடு அமர்ந்திருந்த தணடியைக் கண்டான்.
நிதானமாக அவரது அருகே வந்து நின்றான்."புலவரே! ஏன் தயக்கம்? கிரீடத்தைக் கழற்றிவிட்டு மாலையைச் சூட்டுங்கள்.பிறகு கிரீடத்தை வைத்து அலங்காரத்தை முடியுங்கள். பூஜையை தொடங்குங்கள். காளி மாதா ஏற்றுக்கொள்வாள்." என்று கூறிவிட்டு அவரைத் தாண்டிச் சென்று விட்டான் காளிதாசன்.

திடுக்கிட்டுக் கண்விழித்தார் தண்டிகவி."என்ன ஆச்சரியம்! என்மனதில் நடக்கும் போராட்டத்தை அறியும் வல்லமை படைத்துள்ளானே? காளிதாசன் உண்மையில் என்னினும் உயர்ந்தவன்தான். அவனே சிறந்த காளிபக்தன்.என் மனமாசு அகன்றது. தாயே காளிமாதா! உன் மகனைச் சந்தேகித்த என்னை மன்னித்துவிடு." என்றபடியே காளிதாசன் சென்ற திசையை நோக்கிக் கரம் குவித்தார் தண்டிகவி.

இறைவனிடம் அன்பு காட்ட செயல்கள் அவசியமல்ல. மனமே முக்கியம்.அன்புக்கே இறைவன் கட்டுப் படுபவன் என்ற உண்மையை நாமும் புரிந்து கொள்வோம்.
___________________________________________________________________________________________________________________________________________