செவ்வாய், 1 செப்டம்பர், 2009

கபிலரின் நட்பு

பாண்டிய நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது மதுரை மாநகர். இந்நகரின் கிழக்குப் பகுதியில் உள்ளது வாதவூர் என்னும் சிற்றூர். இச்சித்ரூரில் பிறந்தவர் தான் கபிலர் என்னும் செவி வழிச் செய்தி நிலவுகின்றது. 'புலனழுக்கற்ற அந்தணாளன் ' எனச் சங்கத்துச் சான்றோரால் பாராட்டப் பெற்றவர்.

வாதவூர் என்பது தென்பறம்பு நாட்டைச் சார்ந்தது. பறம்பு நாட்டை வேள்பாரி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.வேள்பாரியின் பால் மாறாத அன்பு கொண்ட கபிலர் பாரியின் உயிர் நண்பனாக அவனுடனேயே வாழ்ந்து வந்தார்.அன்பும் பண்பும் கொண்ட அந்தணராகிய கபிலர் பெரும் புலமை பெற்றவர்.பாரியின் அவைக்களப் புலவராகவும் திகழ்ந்தார்.செந்தமிழ்ப் பாக்கள் இயற்றும் சிறப்பு காரணமாக வேந்தர் பலரையும் இவர் சென்று கண்டு பரிசில் பெறுவதும் உண்டு.

ஒருமுறை சேர நாட்டை நாடிச் சென்றார். அப்போது அந்நாட்டை ஆண்டவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் மன்னன்.அவனைச் செந்தமிழால் சிறப்புச் செய்தார் கபிலர்.அவரது பாடலின் சிறப்பைக் கேட்டு வியந்த மன்னன் கபிலருக்கு நூறாயிரம் காணம் பொன் கொடுத்ததுடன் "நன்றா" என்னும் குன்றின் மீது ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட இடமெல்லாம் புலவருக்குக் கொடுத்தான். பிற்காலத்தில் இவ்விடம் " நணா" என மருவியது. இதனைச் சூழ்ந்த பகுதிகள் கபிலருக்குக் கொடுக்கப் பட்டமைக்குச் சான்றாக அங்கே கபிலக் குறிஞ்சி என்ற ஊர் இன்னும் உள்ளது.

கபிலரது பாடல்களில் குறிஞ்சி நில வர்ணனைகளே மிகுந்து காணப் படுகின்றன. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும் . மலையும் அருவியும், சுனையும் தேனடையும், பலாவும் இவர் பாடல்களில் அழகு சேர்ப்பன. இவ்வாறு குறிஞ்சி நிலத்தைப் பலபடப் பாடிய திறத்தால் "குறிஞ்சிக்குக் கபிலன்" என்ற பெயரையும் பெற்றார்.

ஆரிய நாட்டு மன்னன் பிரகத்தன் என்பான் சேர மன்னன் செல்வக் கடுங்கோவின் சிறந்த நண்பன். இவனது துணையால் கபிலரின் நட்பைப் பெற்றான். தமிழில் காணப்படும் அகப்பொருள் நலத்தை அறிய விரும்பிய பிரகத்தன் அதனை விளக்கிக் கூறுமாறு கபிலரைக் கேட்டான். அவனுக்காக கபிலர் எழுதிய நூல் "குறிஞ்சிப் பாட்டு" எனப்பட்டது. இந்த நெடும் பாட்டு தமிழகத்தின் ஒழுக்கத்தின் மாண்பினை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

ஒருமுறை காட்டின் வழியே நடந்து செல்லும் கபிலர் வழியில் ஆண் பன்றி நின்று கொண்டிருப்பதைக் காண்கிறார்.அவரது கற்பனை விரிவடைந்து பாடலாக வருகிறது. அப்பாடலின் கருத்து, " தன் குட்டிகளோடு பெண் பன்றி படுத்திருக்கிறது. அவற்றை வேட்டுவரும் அவரது நாய்களும் அணுகாதவாறு வெருட்டி ஓட்டியது ஆண் பன்றி. பின்னர் தனது பெண் பன்றியையும் அதன் குட்டிகளையும் வேறிடத்தில் சேர்த்து விட்டுக் காவலாக வழியிலேயே நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த வேட்டுவன் " படைமறவரோடு அஞ்சாது போரிடும் தன் தலைவனைப் போல் அதன் செயல் இருப்பது கண்டு அதனைக் கொல்லாது விட்டுச்சென்றான்." என்ற கருத்தமைந்த பாடல் இவரது குறிஞ்சி பாடும் திறமைக்குச் சான்றாகும்.இவரது உயிர் நண்பன் வேள்பாரி மூவேந்தரின் வஞ்சனையால் இறந்து பட்டான். அவன் பிரிவுக்குப் பெரிதும் வருந்திய கபிலர் பாரியுடன் தானும் உயிர் விடத் துணிந்தார்.ஆனால் பாரியின் வேண்டுகோள் காரணமாக அச்செயலைக் கபிலர் செய்யாது விடுத்தார். பாரியின் மக்கள் அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பல மன்னர்களையும் நாடிச் சென்றார். மூவேந்தரின் பகைக்கு அஞ்சியோ யாது காரணம் பற்ற்யோ எந்த அரசரும் அம மகளிரை மணந்து கொள்ள முன் வரவில்லை. கபிலர் எத்துணை முயன்றும் அவரது முயற்சி பயன் தரவில்லை. முடிவில் மலையமான் நாட்டுத் தலைநகர் திருக்கோவலூரை அடைந்தார்.அங்கே வாழ்ந்த பார்ப்பனர் ஒருவரிடம் பாரியின் மக்களை அடைக்கலப் படுத்தினார்.பார்ப்பனரிடத்திலுள்ள பொருட்கும் உயிர்கட்கும் எவ்விதத் தீங்கும் செய்தலாகாது என்பது அந்நாளைய முறை.அத்துடன் பெண் கேட்டு அதுவே காரணமாகப் போரிடுவதும் இல்லை. இதனை நன்கறிந்திருந்த கபிலர் பாரியின் மக்களை பார்ப்பனரிடம் அடைக்கலப் படுத்தித் தன் பெருஞ்சுமையை விளக்கிக் கொண்டார்.

உயிர் நண்பன் பாரியின்றி இந்நிலவுலகத்தில் வாழ்வதையே பெருஞ்சுமையாகக கருதினார் கபிலர். பாரியின்றி வாழும் கபிலர் உயிரற்ற உடல்போல் உணர்ந்தார்.இம்மையில் பிரிந்து விட்ட பாரியை மறுமையில் இணைந்து வாழ விருப்பம் கொண்டவரானார்.தென் பெண்ணை ஆற்றுக் கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டார் கபிலர். அப்போது அவர் பாடிய பாடலில் பாரியின் மறைவுக்கு அவர் வருந்திய வருத்தமும் நண்பனின் பிரிவால் அவர் பட்ட துயரமும் நன்கு புலனாகும்." மாவண் பாரி ! என்னை நீ பலகாலம் பேணிக் காத்தாய். அது போழ்து ஏன் உயிர் நண்பனாக இருந்தாய்.ஆனால் நீ இவ்வுலகை விட்டுப் பிரியுங்கால் என்னை உன்னுடன் வரவிடாது "இங்கேயே இருந்து பின் வருக" என்று கூறிச் சென்று விட்டாய். இனியும் உன்னைப் பிரிந்து என்னால் தனித்து வாழ இயலாது. இப்பிறவியில் நம்மை நட்பால் சேர்ந்து வாழச் செய்த நல்லூழ் மறுமையிலும் உன்னுடன் வாழும் வாழ்வை ஈவதாக!" என்று பாடி மறைந்தார்.இன்றும் கோவலூர் அருகே கபிலக்கல் ஒன்று இருக்கிறது.அது கபிலரின் வடக்கிருந்த செய்தியைக் கூறிக்கொண்டிருக்கிறது. நட்பு என்றதும் வேள்பாரி கபிலரின் நட்பு நமக்கு நினைவுக்கு வரும் அளவிற்கு வாழ்ந்து மறைந்தவர் கபிலர். இவரது குறிஞ்சிப் பாட்டு நூல் தவிர ஐங்குறுநூறு என்னும் நூலில் குறிஞ்சித்திணை பற்றிய நூறு பாடல்கள் பாடியுள்ளார்.

இவையேயன்றி அகம் புறம் பதிற்றுப் பத்து கலித் தொகை குறுந்தொகை நற்றிணை பத்துப்பாட்டு நூல்களிலும் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.புலவர் வரிசையில் கபிலருக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு என்பதில் ஐயமில்லை.