செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

நல்ல தீர்ப்பு - முதல் பகுதி

சரவணன் மிகவும் கெட்டிக்காரன். நன்றாகப் படிப்பவன். படிப்பில் மட்டுமல்லாமல் நாடகம் இசைப் போட்டி, பேச்சுப் போட்டி,போன்ற பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிறையப் பரிசுகளைப் பெற்றிருக்கிறான். அந்த ஆண்டும் எல்லாப் போட்டிகளையும் வைப்பதற்காக தமிழாசிரியரும் பிற ஆசிரியர்களும் ஈடுபட்டிருந்தனர் . சரவணனின் வகுப்பில் சந்திரன் என்று ஒரு மாணவன் படித்து வந்தான்.அவன் எப்போதும் பெருமை பேசிக்கொண்டே இருப்பான். அதனால் அவனை அனைவரும் சவடால் சந்திரன் என்றே அழைப்பார்கள்.வழக்கம்போல் தன் சவடால் வார்த்தைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தான் சந்திரன்." இந்த ஆண்டு மாறு வேடப் போட்டியில் எனக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். வேறு யாராலும் ஜெயிக்க முடியாது.

" என்று கர்வமாகப் பெசிவந்தான். அவன் நண்பர்கள் அதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர் .ராமுவுக்கு மட்டும் சந்திரனின் பேச்சு வெறும் சவடாலாகப் பட்டது. "டேய் சந்தர்! வெறும் சவடால் விடாதே! சரவண னை மாறு வேடப் போட்டியிலே யாராலும் ஜெயிக்க முடியாது.""சரவணன் என்னடா! அவனுக்கும் மேலே யார் வந்தாலும் அய்யாதான் ஜெயிப்பாரு. தெரியுமா!" " டேய், டேய்! எப்படிடா ஜெயிப்பே?"பலரது குரல்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள அவன் அந்த இடத்துக் கதாநாயகனானான்."அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஜெயிச்ச பிறகு சொல்றேன்." ஏமாற்றமடைந்த மாணவர்கள் கசமுசவென்று பேசியவாறே கலைந்து சென்றனர்.போட்டிகளுக்கான நாளும் வந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாக நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல சரவணன் பலபோட்டிகளில் முதல் பரிசு பெற்றான். மறு நாள் மாறுவேடப்போட்டி என அறிவித்தாய் விட்டது. சவடால் சந்திரன் நிலை கொள்ளாமல் தவித்தான். ஆனால் எப்போதும் முதல் பரிசு வாங்கும் சரவணனோ மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இருந்தான். சரவணனைப் பார்க்கும் போதெல்லாம் சந்திரன் பற்களைக் கடித்தான்."இரு, இரு, மாறு வேடப் போட்டியிலே உன்னை மண்ணைக் கவ்வ வைக்கிறேன்." என்று மனதுக்குள் கருவினான். ஆனால் சரவணன் என்ன வேடம் போடப் போகிறான் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருந்தான். அதனால் அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான்." சரவணா! நாளைக்கு மாறுவேடப் போட்டியிலே நீயும் கலந்து கொள்கிராயல்லவா?""ஆமாம், நீயும்தானே கலந்து கொள்கிறாய்?""ஆமாம் சரவணா! ஆனால் என்ன வேடம் போடறது அப்பிடின்னுதான் யோசிக்கிறேன். நீ என்ன வேடம் போடப் போகிறாய்?" அப்போது ராமு குறுக்கே வந்தான்."டேய் சந்திரா! யாரு கிட்டேயும் என்ன வேடம்னு கேக்கக் கூடாது. நீயா வேடம் போட வேண்டியதுதான்."சரவணன் மென்மையாகச் சிரித்தான்."ராமு! பரவாயில்லை. நமக்குள்ளே என்ன இருக்கு! நான் போடப்போற வேடம் நம் மாந்தருள் மாணிக்கம் நேரு மாமாவின் வேடம். சந்திரா! நீயும் நல்ல வேடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள். பரிசு உனக்கே கிடைக்க நான் வாழ்த்தறேன்." என்றான் சரவணன்.சவடால் சந்திரனின் மனதில் மெதுவாக ஒரு திட்டம் உருவானது. இப்போது அவன் மனதில் " நான் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை.

இந்த சரவணன் ஜெயிக்கக் கூடாது" என்ற எண்ணமே நிறைந்திருந்தது.பொழுது புலர்ந்தது. அன்று மாலைதான் மாறுவேடப் போட்டி நடை பெறப் போகிறது. இதுவரை தனக்கு உதவி செய்வதாகச் சொல்லியிருந்த மேக் அப் மேனாகப் பணியாற்றும் சந்திரனின் மாமா வரவில்லை. அவர் வந்து தனக்கு ஒப்பனை செய்வார் என்ற எண்ணத்தில் தான் தன் நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொண்டிருந்தான். இது வரை அவர் வராதது அவனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக