சனி, 1 ஆகஸ்ட், 2009

அன்பின் சக்தி - இரண்டாம் பகுதி

அன்பின் சக்தி - முதல் பகுதி

நாட்கள் பறந்தன. ராஜாவைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. பத்து நாட்கள் வரைதான் ராஜாமோகம் அதிகமாக இருந்தது. பிறகு ஒவ்வொருவராக சோமுவைச் சுற்றத் தொடங்கினர். ராஜா தன் கையில் பிஸ்கட் சாக்லேட் என்று வைத்துக்கொண்டு கூப்பிட்டாலும் ஒதுங்கிச் சென்றனர்.ஏனென்று ராஜாவுக்கு விளங்கவில்லை.அவன் நண்பன் நாணாவைப் பார்த்து,"ஏண்டா நாணா! ஏன் சீனு, ரமேஷ், பாலு, ரங்கன் இவங்கெல்லாம் என்னை விட்டுவிட்டுப் போயிட்டாங்க. எவ்வளவு தின்பண்டம் வாங்கித்தந்தேன்?

இன்னும் என்ன வேணும்னாலும் வாங்கித்தரேன்னு சொல்லு. அவங்களையெல்லாம் கூட்டிட்டு வாடா!" என்றான் படபடப்பாக.

நாணா அலட்சியமாகப் பதில் சொன்னான்."போனாப்போறாங்க விடு.நாம ரெண்டு மூணு பேருதான் இருக்கோமே ஜாலியா இருக்கலாம் நீ ஏண்டா கவலைப் படுறே?"

அவன் கையில் ராஜா வாங்கிக் கொடுத்த ஐஸ் உருகி கை வழியே வழிய அதை வேக வேகமாக நாவால் நக்கியபடி பதிலளித்தான் நாணா. ராஜாவை கவலை லேசாக சூழத் தொடங்கியது. எப்படியாவது சோமுவிடம் அதிக நண்பர்கள் சேராமல் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனை இரவு முழுவதும் தூங்க விடாமல் செய்தது.

ராஜா அன்று பள்ளிவிட்டு வரும்போதும் தன் நண்பன் நாணாவைச் சந்தித்தான். அவனுடன் ஆலோசனை செய்தபடி நடந்தான். நாணா சொன்னபடியே மறுநாள் சோமுவின் புத்தகப் பையைத் திருடி எடுத்துப் போய் பள்ளித் தோட்டத்துக் கிணற்றில் போட்டுவிட்டான். புத்தகப்பையைக் காணாத சோமு மிகவும் வருத்தத்துடன் வீட்டுக்கு வந்தான்.

அவனுடன் வந்த அவன் நண்பர்கள் ஒவ்வொருவரும்,"கவலைப் படாதே சோமு! உனக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதை நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாக நாங்கள் தருகிறோம். நீயும் படித்துப் புரிந்து கொண்டு எங்களுக்குச் சொல்லிக் கொடு. உன்னிடம் பாடம் கேட்கும்போது நன்றாகப் புரிவதோடு பயப்படாமல் சந்தேகங்களையும் கேட்டுக் கொள்ள முடிகிறது." எனக் கூறியபோது சோமு அனைவருக்கும் நன்றி சொல்லி அனுப்பி வைத்தான்.

நாட்கள் கடந்தன , இன்னும் பத்து நாட்களே ஆண்டுதேர்வுக்கு இருந்தன. சோமுவின் புத்தகங்கள் தொலைந்து போனதால் மாணவர்கள் தரும் புத்தகங்களை கடனாகப் பெற்றுப் படித்த சோமு இன்னும் அதிக கவனத்துடன் படித்தான். படித்ததை தன் நண்பர்களுக்கு அவர் கேட்கும்போதெல்லாம் விளக்கி சொன்னான். சோமுவின் பாடம் சொல்லும் முறைக்க்காகவும் அவனது நல்ல பண்பிர்க்காகவும் வகுப்பில் பாதிபேருக்கு மேல் சோமுவின் வீட்டில் மாலை நேரங்களில் கூடதொடங்கினர். அவரவருக்குத் தேர்வில் வெற்றிபெரவேண்டுமே என்ற கவலை வந்துவிட்டது .

அன்று மாலை ஆறு மணியிருக்கும். கணிதப்பாடத்தில் கடினமான கணக்கை விளக்கி சொல்லிகொண்டிருந்த சோமு அவன் பெயர் சொல்லி பெரியவர் அழைப்பதைப் பார்த்து எழுந்து நின்றான் .ராஜாவும் அவன் அப்பாவும் நின்றுருப்பதைப் பார்த்து கைகுவித்து அவருக்கு வணக்கம் சொன்னான். அங்கிருந்த ஒரு கிழிந்த பாயை மடித்துப் போட்டு அவரை அமரசொல்லி உபசரித்தான். அவன் அம்மா உள்ளே இருந்து நீர் மோர் கொண்டுவந்து கொடுத்து உபசரித்தாள். ராஜா நாணித் தலை குனிந்து நின்றிருந்தான். பெரியவர் பெரியசமியே பேசினார்.

"தம்பி சோமு! இதனை பைய்யங்கள் உங்க வீட்லயே இருக்கங்களே. அவங்களையெல்லாம் நீயே வீட்டுக்கு வாங்கனு கூப்பிடியா? அல்லது அவங்களாவே உன்னைத் தேடி வந்தாங்களா?"
அருகே நின்றிருந்த ரங்கன் , "நாங்களாதான் வந்தோங்க" என்றபோது கணக்கை போட்டு கொண்டிருந்த ரமேஷ் நிமிர்ந்தான். அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது.

"சோமு! இப்போ செரியாப் போட்டுட்டேன் பார். விடை வந்திடுச்சு." கைகொட்டி மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சொன்னபடியே நிமிர்ந்தவன் பெரியவரை பார்த்து மௌனமானான். நோட்டை மட்டும் சோமுவிடம் தந்தான்.அதை வாங்கி பார்த்தார் பெரியசாமி. அதில் சோமு சொல்லிக் கொடுத்த கணக்குகள் எழுதப்படிருந்தன.

"இத்தனை பேர் உன் வீட்டிலே இருக்கிறார்களே! இவங்களோட பெற்றோர் இவங்களைத் திட்ட மாட்டாங்களா?" என்று சொன்னபோது , ரங்கன் இடைமறித்தான் ."எங்கள் வீட்டிலெல்லாம் பத்திரமா போய்வானு அனுப்புவாங்க."

பெரியசாமி தன் மகனைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஒரு பையனைக் கேட்டார். "ஏன் தம்பி! உனக்கு வாத்தியார் சொல்லிதருவதில்லையா? ஏன் சோமுவிடம் வந்து படிக்கிறாய்?"

"வாத்தியாரை விட சோமு சொல்றது நல்லாப் புரியுது. அதோட சந்தேகம் வந்தாலும் பயமில்லாம, தைரியமா கேக்க முடியுது. அதனால எங்க வீட்டிலெல்லாம் சோமு வீட்டுக்கு போனாதான் படிப்பே " ன்னு சொல்லி அனுப்பிடுவாங்க.

"ஐயா! எனக்கு தெரிஞ்சதை என் நண்பர்களுக்கு விளக்கி சொல்றதாலே எனக்கும் மறக்காம இருக்கு. பரீட்சையிலே நல்லா எழுத முடியுது. அதனால் கேக்குறவங்களுக்கு நான் மறுக்காம சொல்லி தர்றேன் . எல்லாரும் என் கூடவே மாலை நேரத்திலே கொஞ்சநேரம் விளையாடிட்டு எங்க வீட்டுலே கூடிப் படிப்பாங்க. வேற காரணம் எதுவுமில்லே ஐயா" பணிவுடன் சோமு கூறவே பெரியசாமி அவனைப் பார்த்து அன்புடன் புன்னகைத்தார்.

அவனை அருகே அழைத்து அன்புடன் அவனைத் தடவிக் கொடுத்தார். " சோமு, நீ ஏழை இல்லேப்பா, பெரிய பணக்காரன். அறிவும் பணிவும் யார்கிட்ட இருக்குதோ அவன்தான் செல்வம் உடையவன். யார்கிட்ட பிறருக்கு உதவணும் என்கிற எண்ணம் இருக்கோ அவனே உயர்ந்தவன். நீ உயர்ந்தவன் , செல்வந்தன். இனி நீயும் எனக்கு ஒரு மகன்போலதான். ராஜா! நீ சொன்னபடி சோமுகிட்ட மன்னிப்புக்கேள். போட்டியிலே நீ தோத்துட்டே" என்றபோது சோமு ஒன்றும் புரியாமல் திகைத்தான். "ஐயா! என்கிட்டே ராஜா ஏன் மன்னிப்பு கேட்கணும்னு சொல்றீங்க. அவன் எந்த தப்பும் பண்ணலியே" என்றான்.

"உனக்குத் தெரியாது சோமு, உன் புத்தகப்பைய்யை இவன் கூட்டாளி நாணா கூட சேர்ந்துகிட்டு கிணத்துக்குள்ளே போட்டுட்டு உன்னைப் படிக்கவிடாம செய்யப் பார்த்தாங்க. ஆனா அதுவும் நடக்கல", என்று சொல்லிவிட்டு ராஜாவைப் பார்த்தார். கண்டிப்புடன் பார்த்த அவரது ஆணையை மீற முடியாமல் சோமுவின் கையயைப் பற்றிக் கொண்டான் ராஜா. அவன் தோள் மீது கை போட்டு அணைத்துக் கொண்ட சோமுவைக் கண்டு பெருமையுடன் சிரித்தார் பெரியசாமி. தன் மகன் திருந்திவிட்டான் என்ற மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக