சனி, 1 ஆகஸ்ட், 2009

அன்பின் சக்தி - முதல் பகுதி

சோமு எட்டாம் வகுப்பில் படிக்கும் சிறுவன். அவன் தகப்பனார் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருபவர் . சோமுவும் தன் தந்தையின் கஷ்டத்தை உணர்ந்து நன்கு படித்து வந்தான். அவன் எண்ணமெல்லாம் தான் நன்றாக படித்து பெரிய டாக்டராகி அந்த ஊரிலயே ஒரு மருத்துவ விடுதி கட்டவேண்டும் என்பதுதான்.

எனவே இரவும் பகலும் எந்நேரமும் படிப்பு படிப்பு தான். அத்துடன் தன் வ்குப்பு மாணவர்களுக்கு கணிதம் அறிவியல் போன்ற கடினமான பாடங்களை எல்லாம் எளிதாகக் கற்றுத்தருவான். இதனால் பல மாணவர்கள் சோமுவுக்கு நண்பர்களானார்கள்.

அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர் பெரியசாமி. அவ்வூரிலேயே பெரிய ஆலைக்குச் சொந்தக்காரர். அவரது மகன் ராஜாவும் சோமுவின் வகுப்பிலேயே படித்து வந்தான். மாணவர்கள் பணக்காரனான என்னிடம் சேராமல் சொமுவைச் சுற்றி வருவதைப் பார்த்துப் பொறாமை கொண்டான்.

இந்தச் செய்தியை அவன் தந்தை அறிந்து கொண்டார். ஏழைகளை எப்போதும் மதிப்புடன் நடத்துபவர். நல்ல பண்பாளர். தன் மகன் ஏழைகளை அலட்சியமாக நடத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது தன் மகனைத் திருத்த வேண்டும் என நினைத்தார்.

அன்று மாலை வீட்டுக்கு ஓடி வந்த ராஜாவை அன்புடன் அழைத்தார்
பெரியசாமி.அருகே வந்து நின்ற ராஜாவை அன்புடன் பார்த்தார்.

" ராஜா!உன் வகுப்பில் முதலாவதாக வரும் மாணவன் யார்?"

"சோமுதான். வெறுப்பை உமிழ்ந்தான் ராஜா.

"உனக்கு அவன் மேல் என் இத்தனை வெறுப்பு? அவனைப்போல் நீயும் படித்து முதலாவதாக வர முயற்சிக்கலாமே?"

"நான் ஏன் கஷ்டப்படவேண்டும்? அவன் அப்பா கூலி வேலை செய்பவர். அதனால் அவன் கஷ்டப்பட்டுப் படிச்சுதான் ஆகணும்.நான் ஏன்....." என்று பேசிக்கொண்டே போனவனைத் தடுத்து நிறுத்தினார் அவன் அப்பா.

"இதோ பார் ராஜா! ஏழை ஏழை என்று ஏளனமாகப் பேசாதே.பல ஏழைகளின் வியர்வையும் ரத்தமும்தான் ஒருவனைப் பணக்காரனாக்கும் சாதனங்கள்."

"அப்பா! ரத்தமாவது வியர்வையாவது! எல்லாம் பணம் செய்யும் வேலையப்பா. ஒருவனிடம் பணம் இருந்தால் அவனிடம் எல்லோரும் கும்பிடு போட்டுக்கொண்டு நிற்பார்கள்." அவன் விளக்கத்தைக் கேட்ட பெரியசாமி புன்னகைத்துக் கொண்டார்.

" சரி நீதான் பணக்காரனாயிற்றே. சோமு ஏழையாயிற்றே. உனக்கு நண்பர்கள் அதிகமா சோமுவுக்கு நண்பர்கள் அதிகமா?"

"இப்போதைக்கு சோமுவுக்குத் தான் நண்பர்கள் அதிகம். ஆனால் நீங்கள் பணம் தந்தால் ஒரு மாதத்தில் அத்தனை பேரையும் எனக்கு நண்பர்கள் ஆக்கிக் காட்டுவேன்." சவால் விட்டான் ராஜா.

பெரியசாமியும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார்.
"சரி. உனக்கு தினமும் பத்து ரூபாய்கள் தருகிறேன்.உன் விருப்பம்போல் செலவு செய்.ஒரே மாதம்தான். கடைசி நாளன்று உன்னிடம் மாணவர்கள் அதிகம் சேர்ந்து உள்ளார்களா சோமுவுடன் சேர்ந்து உள்ளார்களா என்று பார்க்கிறேன்."

"கட்டாயம் என்னிடத்தில் தான் சேர்ந்திருப்பார்கள்."

"அப்படியில்லா விட்டால் நீ சோமுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவனுக்கு நண்பனாயிருக்க வேண்டும். அத்துடன் ஏழைகளை அலட்சியப் படுத்துவதை விட்டு விட வேண்டும்.. சரியா?" என்றார்.

"சம்மதம் அப்பா! நாளை முதல் பாருங்கள்." என்றான் ராஜா.

மறுநாள்காலை சோமுவை வெற்றி கொள்ளப் போகிறோம் என்ற நம்பிக்கையுடன் தன் பள்ளிச்சீருடை அணிந்து கொண்டு தன் தந்தையின் முன் வந்து நின்றான் .பெரியசாமி புன்னகையுடன் ,"என்ன ராஜா! போட்டிக்குத் தயாராகி விட்டாய் அல்லவா? இந்தா, பத்து ரூபாய். உன் விருப்பம்போல் செலவு செய் சரியாக முப்பது நாட்கள் கழித்து நானே உன் பள்ளிக்கு வருவேன் சம்மதமா?"என்றார்.

ராஜா மகிழ்ச்சியுடன் தலையை அசைத்தவாறே பத்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஓடினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக