செவ்வாய், 28 ஜூலை, 2009

இன்சொல் தந்த பரிசு

பள்ளிக்கூட மணி அடித்ததும் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார். மாணவர்களும் வரிசையாக எழுந்து வெளியே சென்றனர்.பாஸ்கரனும் தன புத்தகப் பையை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று வெளியே வந்தான்.அவனைத் தள்ளிக்கொண்டும் மற்ற மாணவர்களைத் திட்டிக்கொண்டும் ஓடினான் முருகன்.அவனுக்குப் பயந்து கொண்டு அனைவரும் வழி விட்டு ஒதுங்கி நின்றனர்.

அவ்வளவு வேகமாக ஓடி வந்தவன் வெளியே மரத் தடியில் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டு நின்று கொண்டான்.இரண்டு நிமிடங்கள் பேசுவதற்குள் சண்டை வந்து விட்டது."டேய் முருகா! நீ எப்பவும் நீ சொன்னபடியேதான் செய்யணும்னு சொல்றே " "ஆமாண்டா அப்படித்தான் சொல்வேன். நீங்கள்ளாம் என்கிட்டே வாங்கித்தின்கிற பயலுகதானே அப்புறம் என்னடா? ""டேய் நீ குடுத்தே நாங்க வாங்கிக்கிட்டோம். இனிமே அப்படிப் பேசாதே.""பேசுவேன் அப்படித்தான் பேசுவேன்.வெட்கங்கெட்ட பயலுக நீங்க. உங்களுக்கு ரோஷம் வேற வருதா?""டேய் வாங்கடா போகலாம்.இவன்கூட பழகறதே தப்புடா.""அட போங்கடா" என்றபடியே அவர்களைத் தள்ளி விட்டுவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு எதையோ வாயில் போட்டு மென்று கொண்டு இருந்தான்.

இதைப்பர்த்துக்கொண்டே மெதுவாக நடந்து வந்தான் பாஸ்கரன். முருகனின் அருகே வந்து அவன் தோளில் தன கையை வைத்தான்.முருகனின் அருகே அமர்ந்து கொண்டான்.அவனை அல்க்ஷியமாகப் பார்த்த முருகன் தன வேலையிலேயே கவனமாக இருந்தான்."முருகா! ஏன் எப்பவும் சிடு சிடுன்னே இருக்கே? ஏன் கடும் சொல்லே பேசறே?""என் இஷ்டம்""என் வகுப்புத் தோழன் நீ.எப்பவும் நல்ல சொற்களும் இனிய வார்த்தைகளும் பேசணும்னு ஆசைப்படறேன்.""நீதான் இனிமையான சொல் பேசுகிறாயே எனக்கு நான் பேசறதுதான் இனிமையான சொல். இதுக்குமேலே இனிமையாகப் பேச எனக்குத் தெரியாது.நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ."

பையைத் தூக்கிக் கொண்டு விறுவிறுவென்று நடந்து மறைந்தான் முருகன். பாஸ்கரன் பெருமூச்சு விட்டவாறே தன இல்லம் நோக்கி நடந்தான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. சாப்பிட்டானபின் பிற்பகல் நேரம்.வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. வெய்யில் இல்லாததால் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர். பாஸ்கரனும் தன நண்பர்கள் சிலருடன் பந்து விளையாடிக்கொண்டிருந்தான். அங்கே வந்த முருகனும் அவர்களுடன் விளையாட சேர்ந்து கொண்டான்.

இவனைப் பார்த்த ராமுவும் கமாலும் "நாங்க வரலேடா " என்றபடியே நகர்ந்தனர். "டேய் முருகன் வரதுனாலே உங்களுக்கேன்னடா கஷ்டம்?" "கொஞ்ச நேரத்துலே சண்டை போடுவான். எப்பவும் திட்டுவான். அவன் கூட நாங்க விளையாட மாட்டோம்.""டேய் ராமு! முருகன் எப்பவாச்சும்தான் கோபப்படுவான். விளையட்டிலேஎல்லாம் கோபப்பட மாட்டான் . வாங்கடா" என்று அவர்களை நிற்க வைத்தான் பாஸ்கரன்.விளையாட்டை விட மனமில்லாததால் இருவரும் மீண்டும் வந்து இணைந்து கொண்டனர்.சற்றே முறுவலுடன் தன நன்றியைத் தெரிவித்துக்கொண்ட முருகன் மகிழ்ச்சியுடன் விளையாடத் தொடங்கினான்.பத்து நிமிட நேரம் மகிழ்ச்சியாக விளையாடினர். சற்றைக்கெல்லாம் தனக்குப்பந்து போடவில்லை என ராமுவைக் கடுஞ்சொல்லால் திட்டினான் முருகன்."டேய் அழுகுணி! ஏண்டா எனக்குப் போடாமே பாஸ்கருக்கே போடறே?"" இதோ நான் உனக்குப் போடறேன் நீ அடி""ஒண்ணும் வேண்டாம். இந்தத் தடிப்பயல் ராமுவுக்கும் கமாலுக்குமே பந்து வீசறான். இந்தக் குரங்கு மூஞ்சியும் இளிச்சுக்கிட்டே அடிக்கிறான். நான் நிற்கிறது இவனுகளுக்குக் கண் தெரியலை.

குருட்டுப்பசங்க..." கமாலுக்குக் கோபம் வந்தது. கையை ஓங்கினான். "டேய்..!" பாஸ்கரன் குறுக்கிடாவிட்டால் குத்து முருகன் முகத்தில் விழுந்திருக்கும். பெரிய சண்டையே நடந்திருக்கும். நல்லவேளையாக பாஸ்கரன் இடையிட்டு விளையாட்டை முடித்து வைத்தான். அனைவரையும் சமாதானமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தான். பின்னர் தன வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான் பாஸ்கரன்.முனகியவாறே மெதுவாக நடந்து சென்றான் முருகன்.அவன் எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது."டேய் தம்பி! இங்கே வா."" நான் ஒண்ணும் டேய் தம்பி இல்லே. எல் முருகன்." அவன் கோபத்தை ரசித்தார் வந்தவர்."அட..ரொம்ப கோபமா இருக்காப்பல இருக்கு. சரி.. எல். முருகா! இங்கே சன்னதி தெரு எங்கே இருக்கு?"புன்னகையுடன் கேட்டார் வந்தவர்." அதெல்லாம் எனக்குத்தெரியாது.

வேற யார் கிட்டவாவது கேட்டுக்குங்க. நீங்க வச்ச ஆளா நான்?""என் தம்பி! ஒரு சின்ன உதவி. அதைச்செய்யா விட்டாலும் பரவாயில்லை. பேச்சிலேயாவது மரியாதை இருக்கலாமே ...படிக்கிற பையன் தானே நீ?""அதப்பத்தி உங்களுக்கென்ன? சன்னதித்தெருவைத் தேடுங்க ..." என்றபடியே ஓடிவிட்டான்.சற்றுத் தொலைவில் திண்ணையில் அமர்ந்தவாறே முருகனுடன் யாரோ ஒரு பெரியவர் பேசுவதைக் கண்ட பாஸ்கரன் வேகமாக அவர் அருகே வந்தான்."அய்யா! வணக்கம்...வாங்க உங்களுக்கு என்ன வேணும்?"முருகனால் மனதில் மூண்ட கோபம் பாஸ்கரனால் தணிந்தது. " தம்பி! சன்னதித் தெரு எதுப்பா?""இந்தத் தெருவோட போயி வலது புறம் திரும்பினால் சன்னதித் தெரு....நீங்க யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க?""அங்கே நாலாம் நம்பர் வீட்டிலே பள்ளித் தலைமை ஆசிரியர் இருக்காரில்லையா...அவரைத் தான் பார்க்கணும்.""அப்படியா? வாங்க...நான் கூட்டிக்கிட்டுப் போறேன்." என்றவன் அவருடன் பேசிய படியே நடந்தான்.அவனது பண்பான நடத்தையைக்கண்டு மகிழ்ந்தவர் அவனைப்பற்றியும் விசாரித்தார்."தம்பி, உன் பேரென்ன? "" என் பெயர் பாஸ்கரன்.

இந்த ஊர் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறேன்.""பாஸ்கரா! நீ வருவதற்கு முன்பாக ஒரு பையன் பேசிக்கொண்டு இருந்தானே, அவன் பெயர் கூட....ஆ.,எல்.முருகன்...அவனும் உங்கள் பள்ளியில் தான் படிக்கிறானா?ரொம்ப கோபக்காரனோ ?""அவன் பெயர் முருகன்தான்.என் வகுப்பில் தான் படிக்கிறான். கொஞ்சம் முன்கோபி.ஆனால் நல்லவன். விளையாட்டிலே தோத்திட்டதால் அவன் உங்ககிட்டே கொஞ்சம் கோபமாகப் பேசியிருப்பான். அவனுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்.""பரவயில்லையே! நண்பனை விட்டுக்கொடுக்காமல் பேசறியே....வெரிகுட்! "என்றவாறே தலைமை ஆசிரியர் வீட்டின் முன் வந்து நின்றார்.வெளியே வந்து பார்த்த தலைமை ஆசிரியர் அவரைப்பார்த்த உடன் மிகவும் பணிவுடன் வரவேற்றார்.அப்போதுதான் தெரிந்தது வந்திருப்பவர் பள்ளியைத் தணிக்கை செய்ய வந்துள்ள மேலதிகாரி என்பது.

மறுநாள் காலையில்தான் வருவதாக இருந்தது, முதல்நாளே வந்து விட்டார். தனது உதவியாளர் இருவரும் மறுநாள் காலையில் வருவார்கள் என்று சொன்னார். அந்த ஊர் கோவிலைப் பார்ப்பதற்காகவும் தான் விரைவிலேயே ஊர் திரும்பவேண்டியிருப்பதாலும் முதல் நாளே வந்ததாகக் கூறினார். அவருடன் அவரது தனியறைக்குச் சென்று அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய பாஸ்கரனுக்குக் கட்டளையிட்டார். தானும் அவர்களுடன் சென்றார்.

மறுநாளும் அதற்கு மறுநாளும் பள்ளி கல்யாணவீடு போல அமர்க்களப்பட்டது. மேலதிகாரிகள் திடீரென வந்து விட்டதால் எல்லா ஆசிரியர்களும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டனர்.அதிகாரி இருக்கும் இடத்திற்கு பாஸ்கரன் அடிக்கடி சென்று ஏதாவது தேவையா? என்று விசாரித்தான் .அவனைப்பார்க்கும் போதெல்லாம் அதிகாரி புன்னகைத்தார்.அந்தப் புன்னகையே தலைமை ஆசிரியருக்குப் புத்துணர்ச்சி ஊட்டியது. அதிகாரி அன்றுடன் தன தணிக்கை முடித்து ஊர் திரும்பப் போகிறார். மாலையில் ஒரு கூட்டம் கூட்டி மாணவர்களிடையே ஒரு சில சொற்கள் பேச ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் கூடியிருந்தது. அனைத்து மாணவரும் ஆசிரியர்களும் கூடியிருந்தனர். தலைமையாசிரியர் பேசியபின் அதிகாரி எழுந்து பேசத் தொடங்கினார்.

" மாணவ மணிகளே! வணக்கம். உங்கள் அனைவரையும் ஒன்றாகப் பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல் இந்தப்பள்ளி மாணவன் பாஸ்கரனைப் பார்த்த பிறகு இந்தப் பள்ளியைப்பற்றி உயர்ந்த எண்ணம்தான் தோன்றுகிறது. பணிவு, இன்சொல், அன்பு கொண்ட பாஸ்கரன் இந்தப் பள்ளிக்கே பெருமை சேர்த்து விட்டான். அவனைப் போலவே இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவனும் இருப்பான் என நம்புகிறேன். கடந்த இரண்டு நாட்களாக என்னுடனேயே இருந்து எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்த பாக்கறான் என்ற மாணவன் தன நல்ல பண்பால் எங்களின் உள்ளங்களை மகிழச் செய்து விட்டான்.அவனுக்கு அடுத்த ஆண்டிற்கான புத்தகச் செலவு சீருடைக்கான செலவு இவற்றை நானே ஏற்கிறேன்.இந்தத் திருவள்ளுவரின் திருக்குறள் நூலை அவனுக்குப் பரிசாக அளிக்கிறேன். " என்றபோது அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.பாஸ்கரன் நாணத்துடன் மேடையேறி நின்றான். அதிகாரி அவனைத் தட்டிக்கொடுத்தவாறு பேசினார். " இந்தப் பரிசை என் கையால் கொடுப்பதை விட அவன் வகுப்பு மாணவன் கையால் கொடுப்பதே சிறந்தது என நான் நினைக்கிறேன். ..."என்றபடியே சுற்றிலும் பார்த்தார். அவர் கண்ணில் படாமல் ராமுவின் முதுகுக்குப்பின்னால் மறைந்து அமர்ந்திருந்த முருகன் அவர் கண்ணில் படவே புன்னகையுடன் அழைத்தார்.

" எல். முருகன் இப்படி மேடைக்கு வா!." அனைவரும் திகைத்தனர். இவன் பெயர் அதிகாரிக்கு எப்படித்தெரியும்? என்று ஆச்சரியப்பட்டனர். அந்த ரகசியம் முருகனுக்கும் அதிகாரிக்கும் மட்டும்தானே தெரியும்!மெதுவாக நடந்து வந்த முருகன் தலை குனிந்து நின்றான். அவன் கையில் நூலைக்கொடுத்தவர்," எல். முருகா! உன் கையால் இந்தப்பரிசைக் கொடு . அடுத்த ஆண்டு இதேபோல நீ பரிசு வாங்க வேண்டும்..." என்றபடியே அவன் முதுகைத்தட்டினார். அழகான அந்த நூலைத் தடவியவாறே அதைப் பாஸ்கரனின் கையில் கொடுத்தான் முருகன். தனக்கு வரவேண்டிய பரிசு தன துடுக்குத் தனத்தால் பாச்கரனுக்குச் சென்ன்று விட்டதே....தான் மட்டும் அதிகாரியிடம் மரியாதையுடன் இன்சொல் பேசியிருந்தால் இந்தப்பரிசு தனக்கு வந்திருக்குமே. எத்தனை பெருமையாக இருந்திருக்கும்! "அவன் மனம் அன்றே முடிவு செய்து கொண்டது. ' இனி எந்த சமயத்திலும் இனிய சொல் தவிர கடுஞ்சொல் பேசுவதேயில்லை .'

விளையாட்டை விட மனமில்லாத இருவரும் மீண்டும் வந்து சேர்ந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக